ADDED : ஜூன் 09, 2024 02:44 AM
சென்னை: கொரோனா பாதிப்புக்குப் பின், சிறப்பு ரயில்கள் வழக்கமான பயணியர் ரயிலாக இயக்கப்பட உள்ளன. இதனால், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காலகட்டத்தில், நாடு முழுதும் விரைவு மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய துார சாதாரண கட்டண பயணியர் ரயில்களும், சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. இதனால், இந்த வகை ரயில்களுக்கு, ஜீரோவில் துவங்கும் எண்கள் தற்காலிமாக வழங்கப்பட்டன.
தற்போது, இந்த சிறப்பு ரயில்கள் வழக்கமான பயணியர் ரயில்களாக, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. இதனால், 296 பயணியர் ரயில்களின் எண்களும் மாற்றப்பட்டு, 5, 6, 7ல் துவங்கும் எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல, சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட போது, கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பயணியர் ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

