40 துப்பாக்கி தோட்டாக்கள் நடிகர் கருணாசிடம் பறிமுதல்
40 துப்பாக்கி தோட்டாக்கள் நடிகர் கருணாசிடம் பறிமுதல்
ADDED : ஜூன் 03, 2024 06:12 AM

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து, திருச்சிக்கு பயணம் செய்ய வந்த நடிகர் கருணாசிடம் இருந்து, 40 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து திருச்சி செல்ல, 'இண்டிகோ' பயணியர் விமானம், நேற்று காலை தயார் நிலையில் இருந்தது.
அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். நடிகர் கருணாசும், அந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.
அவரது பையை அதிகாரிகள் சோதனை செய்த போது, வெடிபொருட்கள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
இதையடுத்து, அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர். அதில், இரண்டு பைகளில், 32 எம்.எம்., ரகத்தைச் சேர்ந்த, 40 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் கருணாசிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, 'தற்காப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளேன். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, திண்டுக்கல் காவல் நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்து உள்ளேன்.
ஞாபக மறதியால், தவறுதலாக தோட்டாக்களை எடுத்து வந்து விட்டேன்' என, பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்துக்கு துப்பாக்கி தோட்டாக்கள் எடுத்து வரக்கூடாது எனக் கூறிய பாதுகாப்பு அதிகாரிகள், கருணாசின் விமான பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பினர்.
இதனால், திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்றார்கருணாஸ்.