ADDED : செப் 01, 2024 12:49 AM

சென்னை: மாநில நெடுஞ்சாலை துறையை மறுசீரமைப்பு செய்வதற்கு, ஐந்து பேர் அடங்கிய குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது.
பொதுப்பணித்துறையில் இருந்து, 1996ம் ஆண்டு, நெடுஞ்சாலைத்துறை தனியாக பிரிக்கப்பட்டு, அரசு செயலர் பதவியுடன் செயல்பட துவங்கியது.
இதனுடன், சிறு துறைமுகங்கள் இணைக்கப்பட்டு, 2008ல், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை என, பெயர் மாற்றப்பட்டது. இதில், பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றின் வழியாக, 67,216 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
இத்துறையை மேம்படுத்தவும், பிரிவுகளை மாற்றி, துறையை மறு சீரமைக்கவும், அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, நெடுஞ்சாலை துறையில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து, அதன் உறுதித்தன்மையை கண்டறிந்து, பழுதுகள் இருந்தால் உடனடியாக சீரமைக்க, நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்களை கொண்ட, 'பாலங்கள் சிறப்பு ஆய்வு பிரிவு' உருவாக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புதல்; ஐந்து ஆண்டு களுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் தேவையா என ஆய்வு செய்தல்; துறை மறுசீரமைப்பு ஆகியவை குறித்து, விரிவாக ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க, 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், தமிழக சாலை மேம்பாட்டு நிறுவன தலைமை பொது மேலாளர் பழனிவேல், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தேசிய நெடுஞ்சாலை பிரிவு துணை தலைமை பொறியாளர் சிவகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.