போதைப்பொருள் கடத்தல் வழக்கு 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்; சர்வதேச போதைப்பொருட்கள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்; சர்வதேச போதைப்பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 02, 2024 05:15 AM

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சர்வதேச போதை பொருட்களான 'மெத்தபெட்டமைன், 'லைசிரிக் ஆசிட் டைத்லிலிமைட்' கொகைன்' கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் ஜூன் 29ல் எ.புதுப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கொடைக்கானலில் இருந்து கம்பம் சென்ற காரை சோதனையிட்டதில் 250 கிராம் கஞ்சா, 50 கிராம் எடையில் 30 'மெத்தபெட்டமைன்' பாக்கெட்டுகள் இருந்தன.
கார், போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கொடைக்கானல் நாயுடுபுரம் விகாஸ் ஷியாம் 22, ஆரிப்ராஜா 22, தேனி, நாராயணத்தேவன்பட்டி ராம்குமாரை 33, கைது செய்தனர்.
கேரளாவை சேர்ந்த சல்மான்கான் 26, தப்பினார். தேனி எஸ்.பி., சிவபிரசாத் விசாரணை நடத்தினார். ஆரிப்ராஜா கஞ்சா கடத்தல், மற்ற இருவரும் மெத்தபெட்டமைன் வழக்கில் கைதாகினர்.
கொகைன் பறிமுதல்
தனிப்படை போலீசார் கோவையில் அன்பழகன் 24. ஆனந்த் 38. பெங்களூரில் யாசர் முக்தார் 36 ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 35 கிராம் மெத்தபெட்டமைன், தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான லைஜெரிக் ஆசிட் டைத்திலேமெட் 0.22 கிராம், கொக்கைன் 0.80 கிராம் மற்றும் 100 கிராம் கஞ்சா, விலையுயர்ந்த 5 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.
இவர்களுக்கு போதைப்பொருள் வினியோகிக்கும் 'நோகன்' என்பவரை கைது செய்ய போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். கைதான 5 பேரும் பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
இவர்களை நீதிபதி கமலநாதன் 15 நாட்கள் ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார். அவர்கள் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.