ADDED : ஜூலை 11, 2024 01:58 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள அரசு பஸ் டிப்போவில் டிரைவராக உள்ளவர் சுல்தான் பாஷா, 56. இவருக்கும், சிவகங்கை மாவட்டம், கொண்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்த, முத்தம்மாள், 21, என்ற இளம்பெண்ணுக்கும், பஸ்சில் வந்து சென்றதில் காதல் ஏற்பட்டது. காதல் ஜோடி கடந்த மாதம், 15ம் தேதி எஸ்கேப் ஆனது.
இதுகுறித்து முத்தம்மாள் உறவினர்கள் புழுதிப்பட்டி போலீசில் அளித்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், முத்தம்மாளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி, அவரது உறவினர்கள், நேற்று காலை, 5:00 மணிக்கு, துவரங்குறிச்சி பஸ் டிப்போ வாசலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த துவரங்குறிச்சி போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசி, மறியலை கைவிட வைத்தனர். இதனால், நேற்று காலை, அந்த டிப்போவில் இருந்த அதிகாலை புறப்படும் பஸ்கள், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

