6 மருத்துவ கல்லுாரிகள், கோவை எய்ம்ஸ் தமிழக கோரிக்கைகள் டில்லியில் நிராகரிப்பு
6 மருத்துவ கல்லுாரிகள், கோவை எய்ம்ஸ் தமிழக கோரிக்கைகள் டில்லியில் நிராகரிப்பு
ADDED : மார் 05, 2025 11:54 PM

தமிழகத்திற்கு ஆறு மருத்துவ கல்லுாரிகள், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட, தமிழகம் முன்வைத்த கோரிக்கைகளை, மத்திய அரசு ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் டில்லி சென்றார். அங்கு, மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
குறிப்பாக, மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலுார், ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், புதிய மருத்துவ கல்லுாரி துவங்க அனுமதி வேண்டும். அதேபோல், கோவையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்நிலையில், மும்மொழி கொள்கை, ஹிந்தி எதிர்ப்பு போன்ற விவகாரங்களில், மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு செயல்பட்டு வருவதால், அமைச்சரின் கோரிக்கைளில் சிலவற்றை, மத்திய அரசு நிராகரித்துஉள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப மருத்துவ கல்லுாரிகள் இருப்பதால், ஆறு புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி, தற்போதைய சூழலில் வழங்கப்படாது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதை வைத்து, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்தன.
அதேபோன்று சூழல் வந்து விடக் கூடாது என்பதால், கோவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இப்போதைக்கு அனுமதி இல்லை என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என, திட்டவட்டமாக மத்திய அமைச்சர் தெரிவித்து விட்டார்.
அதேநேரம், நாமக்கல், திருப்பூர், விருதுநகர் மருத்துவ கல்லுாரிகளில், தலா 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 150 ஆக அதிகரிப்பு, புற்றுநோய், நரம்பியல் சிகிச்சை பிரிவு மேம்பாட்டுக்கான நிதி வழங்க, மத்திய அரசு முன்வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.