ADDED : ஜூன் 15, 2024 01:15 AM
கடலுார்:''தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது:
அரியலுார் மாவட்டம், சன்னாசிநல்லுாரில் மக்கள் பயன்படுத்தி வந்த இடுகாட்டை அகற்றி மணல் எடுத்தனர். அதை எதிர்த்து மக்கள் போராடினர். மக்கள் பிரதிநிதியாக நானும் போராட்டத்தில் பங்கேற்றேன். அதற்காக ஒரு பொய் வழக்கு பதியப்பட்டு, கடலுார் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் 40 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றதால் தான், பா.ஜ., சுயபலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்குச் சென்றது. பா.ஜ., உலக அளவில் மோடியை வைத்து ஒரு பிம்பத்தை கட்டி வைத்திருந்தனர்.
அது தகர்ந்து, பா.ஜ., மற்ற கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி அரசாக ஆட்சி நடத்துகிறது. பா.ஜ., அரசு எத்தனை நாள் நீடிக்கும் என டில்லியில் பேசப்படுகிறது. தி.மு.க., கூட்டணியை சேர்ந்த 40 எம்.பி.,க்களும், தமிழக உரிமைகளுக்காக போராடுவர்.
தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. வரும் 18ம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்கினால் பறிமுதல் செய்யப்படும். தமிழக பதிவெண் மாற்றிய பிறகே ஒப்படைக்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக, 2,000 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதில், 850 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. மீத பஸ்கள் மாதம், 200 வீதம் பயன்பாட்டிற்கு வரும்.
மேலும், ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன், 2,200 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இதுதவிர மேலும் 3,000 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள், 7,200 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, ஏற்கனவே, 15 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள பஸ்கள் நீக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

