ADDED : ஜூலை 26, 2024 01:26 AM
சென்னை:''நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 80 சதவீதம் பேர் பல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் கவுரவ செயலர் அசோக் தோப்லே கூறினார்.
சென்னை போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஜானகி எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் கவுரவ செயலர் அசோக் தோப்லே பேசியதாவது:
அனைத்து தரப்பினரும் பல் பரிசோதனை செய்து, ஆலோசனை பெறும் வகையில், 'செயற்கை நுண்ணறிவு' சார்ந்த மொபைல் போன் செயலியை உருவாக்க வேண்டும்.
அதேபோல, அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில், 3.55 லட்சம் பல் டாக்டர்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தான் உள்ளனர்.
புகையிலை பழக்கம் அதிகமாக உள்ளதால், நாளொன்றுக்கு எட்டு பேர் வரை வாய்ப்புற்று நோயால் உயிரிழக்கின்றனர்.
மொத்த மக்கள் தொகையில், 80 முதல் 90 சதவீதம் பேருக்கு, பல் சார்ந்த நோய்கள் காணப்படுகின்றன. பல் சார்ந்த நோய்க்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
எனவே, நடமாடும் வாகனங்கள் வாயிலாக அனைத்து பகுதிகளுக்கும் பல் டாக்டர்கள் சென்று, பல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

