ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் நுாதன மோசடி
ஓய்வு பெற்ற பேராசிரியையிடம் ரூ.84.50 லட்சம் நுாதன மோசடி
ADDED : ஜூலை 01, 2024 03:07 AM
தேனி: தேனி, கெங்குவார்பட்டியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற வேதியியல் துறை பேராசிரியை பானுமதி, 74. இவரது மொபைல் போன், 'வாட்ஸாப்' வாயிலாக மே 18ல் தொடர்பு கொண்ட சிலர், 'மும்பை போலீசில் இருந்து பேசுகிறோம்' என்றனர்.
மேலும், 'உங்கள் பெயரில் வாங்கிய சிம் கார்டு வாயிலாக வங்கி கணக்கு துவங்கி, அதன் வாயிலாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனால் உங்களை கைது செய்ய உள்ளோம்' என, கூறினர்.
அதிர்ந்த பேராசிரியையிடம், 'இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது' என, எச்சரித்துள்ளனர். மேலும், விசாரணைக்காக வங்கி கணக்கில் உள்ள பணத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்ப வேண்டும் என, மிரட்டினர்.
விசாரணை முடிந்ததும் பணம் திருப்பி அனுப்பப்படும் என, தெரிவித்தனர்.
இதை நம்பிய பேராசிரியை, ஐந்து தவணைகளாக, 84.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளில் செலுத்தினார்.
பணம் அனுப்பி, ஒரு மாதத்திற்கு பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேராசிரியை, தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.