ADDED : ஏப் 26, 2024 08:58 PM
சென்னை:சென்னை விமான நிலைய கழிப்பறையில், குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த, 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகை பகுதியில் உள்ள கழிப்பறையை ஊழியர்கள் சுத்தப்படுத்திய போது, குப்பைத் தொட்டியில் பார்சல் ஒன்று கிடந்ததை பார்த்தனர்.
அதில், வெடிகுண்டு ஏதாவது இருக்கலாம் என சந்தேகப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்ததும், பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதனுள் நான்கு தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 1 கிலோ, 250 கிராம் எடையுள்ள அதன் மதிப்பு 90 லட்சம் ரூபாய். கடத்தி வந்த ஆசாமி யார் என்று, 'சிசிடிவி கேமரா' காட்சிகள் வாயிலாக, ஆய்வு செய்து வருகின்றனர்.

