வியாபாரியிடம் ரூ.2.20 கோடி மோசடி நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு
வியாபாரியிடம் ரூ.2.20 கோடி மோசடி நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : ஜூன் 07, 2024 09:13 PM
கோவை:கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சமத்துார் அண்ணா நகரை சேர்ந்த ஜெபராஜ், 58; நிலக்கடலை வியாபாரி.
இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகார் மனு:
பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த தேவசீலன், தனியார் அறக்கட்டளை ஒன்றில் பொருளாளராக உள்ளார். 2018ம் ஆண்டு, தன் அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் 13.98 கோடி ரூபாய் பணத்தில் நடுக்கல்பாளையத்தில், 5 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தோப்பு பராமரிப்பு பணியையும், அதற்குரிய தொகையையும் தருவதாக கூறினார். இதற்கென, 2.20 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக அவரும், அவரது மனைவி ராஜியும் கேட்டனர்.
அதை நம்பி, 2018 முதல், 2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 2.20 கோடி ரூபாய் வழங்கினேன். அதன்பின் அவர்கள் தென்னந்தோப்பு பராமரிப்பு பணியை எனக்கு தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தி என் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது மோசடி உட்பட, நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.