வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சீமான் மீது புதிய வழக்கு பதிவு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சீமான் மீது புதிய வழக்கு பதிவு
ADDED : செப் 01, 2024 05:37 AM

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவின்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
மறைந்த கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் அவதுாறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகியான, சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய சீமான், 'ஏற்கனவே அ.தி.மு.க., மேடைகளில் பாடப்பட்ட கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக, சாட்டை துரைமுருகனை கைது செய்துஉள்ளனர்.
'அந்த பாடலை யாரோ எழுதி உள்ளனர். அதை நானும் பாடுகிறேன்' எனக் கூறி பாடி காட்டினார். இதற்காக என் மீது நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் சவால் விட்டார்.
'அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த ஒரு வார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தெரிந்தே அந்த வார்த்தையை பயன்படுத்தியதால், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அஜேஷ் என்பவர், சென்னை பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் சீமான் மீது புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்த ஆணையம், கடந்த 30ம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து, அதற்கான நிலை அறிக்கையை, நாளைக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அஜேஷ் கொடுத்த புகார் அடிப்படையில், சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.