பெயின்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து; கருகிய நிலையில் இருவர் சடலம் மீட்பு
பெயின்ட் கம்பெனியில் திடீர் தீ விபத்து; கருகிய நிலையில் இருவர் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 01, 2024 05:26 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், தனியார் பெயின்ட் மற்றும் கெமிக்கல் கம்பெனியில் நேற்று மாலை திடீர் விபத்து ஏற்பட்டு, தகர கூரை வெடித்துச் சிதறியது.
இதில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும், கம்பெனிக்குள் இரண்டு பேர் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
மின் கசிசு
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை காக்களூர், தண்ணீர்குளம் மற்றும் புட்லுார் ஆகிய மூன்று ஊராட்சி எல்லைகளில், 280 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு, கார் தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகம் தயாரிப்பு, பெயின்ட் கம்பெனி, கெமிக்கல் கம்பெனிகள் உள்ளன.
புட்லுார் மேம்பாலம் அருகில் 'ஜென் பெயின்ட் மற்றும் கெமிக்கல்' கம்பெனி 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு, அம்பத்துாரை சேர்ந்த ேஷாபனா, 31, சுகந்தி, 56, புஷ்கர், 35, கடம்பத்துாரை சேர்ந்த பார்த்தசாரதி, 45 ஆகிய நான்கு தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மாலை, 4:15 மணியளவில், பெயின்ட் கம்பெனி மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, பெயின்ட் மற்றும் கெமிக்கல் பொருட்களில் தீப்பற்றியதால், தகர கூரை வெடித்து நாலாபுறமும் சிதறியது.
இதில், ேஷாபனா, பலத்த காயத்துடன் வெளியேறி விட்டார். அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், பறந்து வந்த கூரை, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, வேப்பம்பட்டு அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலாளி சீனிவாசன், 37 என்பவர் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், திருவள்ளூர், பேரம்பாக்கத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர்.
தண்ணீர் தெளித்ததும், கெமிக்கல் பொருட்கள் மீண்டும் பற்றி எரிந்ததால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
காணவில்லை
இரவு 7:00 மணியளவில் நெருப்பு தணிந்ததும், தீயணைப்பு வீரர்களுடன், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது, உள்ளே சிக்கியிருந்த மூவரில் இரண்டு பேர் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்தனர்.
அவர்களை, போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு கொண்டு சென்றனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தை கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., சீனிவாசபெருமாள் பார்வையிட்டனர். விபத்து குறித்து முழு விசாரணை அறிக்கை, அளிக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

