ADDED : மார் 28, 2024 11:41 PM
சென்னை:கடலுாரைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, துபாய் தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர் பிரேம் குமார், 34.
இவர் மீது, வரதட்சணை கொடுமை, மிரட்டுதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக தேடி வந்தனர்.
ஆனால், பிரேம்குமார் போலீசிடம் சிக்காமல், தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு வெளிநாட்டுக்கு தப்பி ஓடவும் திட்டம் தீட்டினார். இந்த தகவல் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்தது.
பிரேம்குமாரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் தரப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வந்தவர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அந்த விமானத்தில் செல்ல, பிரேம்குமார் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கணினியில் ஆய்வு செய்த போது, அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என, உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பிரேம்குமாரை பிடித்து, அவரது துபாய் பயணத்தை ரத்து செய்தனர். நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீசார், பிரேம்குமாரை கைது செய்தனர்.

