ADDED : மே 04, 2024 10:08 PM
சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை கார்டுதாரர்களிடம், ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்கின்றனர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை கூட்டுறவு துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களிடம் எந்த பொருளையும் கட்டாயப்படுத்தி விற்க கூடாது; அவ்வாறு செய்யும் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்டாயப்படுத்தி விற்றால் புகார் அளிப்பது குறித்து கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல், கூட்டுறவு பண்டகசாலை மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.