இடைக்கால முன் ஜாமின் கேட்டு அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு
இடைக்கால முன் ஜாமின் கேட்டு அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மனு
ADDED : ஜூலை 03, 2024 02:30 AM
கரூர்:தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், இடைக்கால முன்ஜாமின் கேட்டு, அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்களால் கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமின் கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு கடந்த, 25ல் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் அருகே வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 50. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரில் எலெக்ட்ரிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், கொடுத்த புகாரின்படி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், யுவராஜ் உள்ளிட்ட பலர் மீது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாகவே உள்ளார். இந்நிலையில், அவரின் தந்தை ராமசாமி, 78, உடல்நலக்குறைவால், கோவை, தனியார் மருத்துவமனையில், ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை ராமசாமியை அருகில் இருந்து கவனித்து கொள்ள வசதியாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு மற்றும் வாங்கல் போலீசார் பதிவு செய்த வழக்கில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
நேற்று வழக்கை விசாரித்த, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணையை, இன்று ஒத்தி வைத்தார்.