ADDED : ஜூலை 24, 2024 08:57 PM
சென்னை:'முதல்வர் ஸ்டாலின், தமிழக நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய பட்ஜெட்டில், தமிழகம் என்ற பெயர் இடம்பெறவில்லை என கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும், 'நிடி ஆயோக்' கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது நகைப்புக்கு உரியது. பட்ஜெட் உரையில் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள மாநிலங்களுக்கான நலத் திட்டங்களை தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நல திட்டங்களும் கிடைக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
தி.மு.க., மத்தியில் காங்கிரசுடன், 2004 முதல், 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஆறு ஆண்டுகள் தமிழகத்தின் பெயர் இல்லை. அந்த ஆறு ஆண்டுகளும், காங்., - தி.மு.க., கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?
பிரதமர் மோடி அரசு, 2014 முதல், 2024 வரை பத்து ஆண்டுகளில் பட்ஜெட் வாயிலாக, தமிழகத்திற்கு வழங்கிய நலத் திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்படவில்லை என்பது, ஸ்டாலினுக்கு தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று, தமிழக தேவைகளை எடுத்து கூறி, நல திட்டங்களை பெறுவதை கைவிட்டு விட்டு, கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின்.
தொகுதியின் தேவைகள் குறித்து, பார்லிமென்டில் பேச தேர்வு செய்யப்பட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசவே இல்லை.
முதல்வர் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே. அவர், ஒரு நாள் விளம்பரத்துக்காக இதுபோன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழக நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***