முரசொலி அலுவலக நில விவகாரம் மேல் நடவடிக்கை கூடாது என அறிவுரை
முரசொலி அலுவலக நில விவகாரம் மேல் நடவடிக்கை கூடாது என அறிவுரை
ADDED : ஏப் 03, 2024 12:35 AM
சென்னை:'சென்னையில், 'முரசொலி' அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகார் குறித்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, தேசிய ஆதிதிராவிட ஆணையத்துக்கு அறிவுறுத்துவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில், 12 கிரவுண்ட் நிலத்தில், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த நிலம், ஆதிதிராவிட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலம் என, பா.ஜ., பிரமுகர் சீனிவாசன், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, முரசொலி நிர்வாகத்துக்கு, 2019 நவம்பர், டிசம்பரில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'நிலத்தின் தன்மை குறித்த உண்மையை கண்டறிய, ஆணையம் விசாரிக்க வேண்டியதுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி விசாரித்து, உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை தள்ளி வைக்கும்படி, தேசிய ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் கோரினார்.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''தேசிய ஆணையத்தின் அதிகாரவரம்பு குறித்து கேள்வி எழுப்பிய இதுபோன்ற வழக்குகளில், தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஆணையம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, ஆணையத்தை அறிவுறுத்துவதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, விசாரணையை, வரும் 25க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

