UPDATED : ஜூன் 15, 2024 08:05 AM
ADDED : ஜூன் 15, 2024 07:45 AM

சென்னை : 'கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையான முடிவை, அனைவரும் கூடி எடுக்க வேண்டும்' என ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம் பிளவுற்று கிடக்கும் இதே நிலையோடு, நடக்க இருக்கிற விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டு, 11வது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? இல்லை, ஒன்றுபட்ட அ.தி.மு.க., என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி, 2019ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில், நாம் ஈட்டிய அன்றைய இடைத்தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி, கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா?
இந்த ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது. எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றுவதை விட, கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையான முடிவை, அனைவரும் கூடி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

