கீழடியில் மேலும் முறையான அகழாய்வு தேவை அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு
கீழடியில் மேலும் முறையான அகழாய்வு தேவை அமர்நாத் ராமகிருஷ்ணன் பேச்சு
ADDED : ஜூலை 07, 2024 04:46 AM

மதுரை: ''சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்னும் முறையான அகழாய்வு தேவை,'' என மதுரையில் மரபிடங்களின் நண்பர்கள் மற்றும்பாண்டிய வட்டாரம் அமைப்பு சார்பில் பேராசிரியர் வெங்கடராமன் நினைவு சொற்பொழிவில்மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசினார்.
'கீழடி அகழாய்வுகள் காட்டும் நகரப் பண்பாட்டுக் கூறுகளை புரிந்து கொள்ளல்' தலைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
வைகை ஆற்றின் வலது, இடது புறங்களில் 270 கி.மீ.,துாரம் 293 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 100 இடங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஆனால் மக்கள் வாழ்ந்து, மறைந்த ஒரே இடம் கீழடி. அதனால்தான் அதன் அகழாய்வு பேசப்படுகிறது.
அது நகர நாகரீகம் என்பதற்கு சான்று உள்ளது.அங்கு 110 ஏக்கரில் 102 குழிகள் அமைத்து அகழாய்வு நடந்தது.
ஆறரை மீட்டர் ஆழத்திற்கு பழங்கால பொருட்கள்படிந்துள்ளன. அதில் 3.5 மீ., ஆழத்தில் எடுக்கபட்ட பொருட்களுக்கு அறிவியல் பூர்வமாக 'கார்பன் டேட்டிங்' ஆய்வு செய்து சரியான வயது மதிப்பீடு செய்யப்பட்டது.
அதன் கால அளவு கி.மு., 8ம் நுாற்றாண்டு முதல் 5ம் நுாற்றாண்டு. அதிகபட்சம் கி.மு.,300 ம் நுாற்றாண்டு என கணக்கிடப்பட்டுள்ளது. அது 1100 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியுள்ளது. மனிதன், விலங்குகளின் உருவம் கொண்ட பொருட்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன.
இது எந்த மதத்தை சார்ந்ததும் அல்ல. சில்வர்,காப்பர் நாணயங்கள், அரிசி, முதல்முறையாக குதிரையின் எலும்பு கிடைத்தன. விவசாய வளர்ச்சிதான் கீழடியின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளது. எரி உலையில் சாயம் காய்ச்சியதற்கான ஆதாரங்கள் இல்லை.
தொழிற்சாலை இருந்ததாக கருதினாலும் அதற்கு தேவையான மூலப்பொருட்கள், உற்பத்தி செய்த பொருட்கள், அதன் கழிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் மேலும் முறையான அகழாய்வு தேவை. இறந்த மனிதர்களை அடக்கம் செய்த இடத்தில்தான் ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு நடந்துள்ளது. அம்மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர் என்பதை கண்டுபிடிக்கவில்லை. கடலியல் தொல்லியல் அகழாய்வை நாம் துவக்கவே இல்லை என்றார்.
'பாண்டிய நாட்டின் பழங்கால நீர் மேலாண்மை அமைப்பு' தலைப்பில்மூத்த கல்வெட்டு, தொல்லியல் ஆய்வாளர் வேதாசலம், 'தமிழகத்தில் புதிய கற்கால, இரும்புக் காலச் சமூக உருவாக்கம்,' தலைப்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலை பேராசிரியர் செல்வகுமார் பேசினர்.