ADDED : மார் 05, 2025 05:24 AM
சென்னை, ; போக்குவரத்து கழகங்களில், டி.சி.சி., - டி.ஐ.சி.ஐ., பணியிடங்களை ஏற்படுத்த, பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒருசேர மேற்கொள்ளும், டி.சி.சி., பணியாளர்களை, நேரடி நியமனம் வாயிலாக நியமிக்க பொது சேவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்பணியில் சேர, குறைந்தது, 10-ம் வகுப்பு படித்து, கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது உட்பட, கல்வித்தகுதி மற்றும் உடல் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படுவோருக்கு, 17,700 முதல் -56,200 ரூபாய் வரை ஊதியமாக வழங்க வேண்டும். இதேபோல, ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர், டிக்கெட் பரிசோதகர் போன்ற பணிகளை, ஒரு சேர மேற்கொள்ளும், டி.ஐ.சி.ஐ., பணியிடங்களை, பதவி உயர்வு வாயிலாக நிரப்ப விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, 35,600 ரூபாய் முதல் -1.12 லட்சம் ரூபாய் வரை, ஊதியம் வழங்க வேண்டும் என, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ளார்.