எமிஸ் டி.சி., வழங்கும் உத்தரவு தாமதம்: பள்ளி மாறும் மாணவர்களுக்கு பாதிப்பு
எமிஸ் டி.சி., வழங்கும் உத்தரவு தாமதம்: பள்ளி மாறும் மாணவர்களுக்கு பாதிப்பு
ADDED : ஏப் 29, 2024 06:09 AM
சென்னை : பள்ளிகளில் எமிஸ் டி.சி., வழங்க, பள்ளி கல்வி துறை உரிய உத்தரவிடாமலும், ஏற்பாடுகள் செய்யாமலும் தாமதிப்பதால், பள்ளி விட்டு பள்ளி மாறும் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் முடிந்து, கடந்த 26ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாற்றுச் சான்றிதழ் இல்லாமல், வெறும் ஆதார் எண் அடிப்படையில் மட்டும் இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, 3.24 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த, பள்ளி கல்வி துறை வழங்கும் எமிஸ் டி.சி., கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பள்ளி கல்வியின் ஆன்லைன் தளமான எமிஸ் வழியே, டி.சி., என்ற மாற்றுச் சான்றிதழ் வழங்கும் வசதியை, பள்ளி கல்வி துறை இன்னும் துவக்காமல் உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் மாற்றுச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தாலும், தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் நிர்வாகப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், புதிய கல்வியாண்டு பிறக்கும் முன், பிற பள்ளிகளில் சேர வேண்டிய மாணவர்களும், பிற ஊர்கள், பிற மாநிலங்களுக்கு இடமாறுதலில் செல்லும் மாணவர்களும், பள்ளிகளில் டி.சி., வாங்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பிரச்னைக்கு, பள்ளி கல்வி, தொடக்க கல்வி, தனியார் பள்ளி இயக்குனரகங்கள், எமிஸ் தள பராமரிப்பு மேற்கொள்ளும் சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் இடையே, ஒருங்கிணைப்பின்றி குளறுபடி உள்ளதே காரணம் என, பள்ளிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
பள்ளி கல்வியின் பல்வேறு இயக்குனரகங்கள் இடையிலான நிர்வாக இடைவெளிகள், மாணவர்களையும், பெற்றோரையும் கடுமையாக பாதிப்பதாக பெற்றோரும் புகார் தெரிவித்துள்ளனர்.

