அம்மி, ஆட்டு உரல் வைத்து மாவு அரைத்து ஆர்ப்பாட்டம்
அம்மி, ஆட்டு உரல் வைத்து மாவு அரைத்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 06:36 AM

சென்னை : தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதைக் கண்டித்தும், ரேஷனில் பருப்பு, பாமாயில் வினியோகத்தை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில், நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டண உயர்வால்,பழைய காலத்திற்கு திரும்பும் நிலை உள்ளதைக் காட்டும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், கைகளில் அரிக்கேன் விளக்கு மற்றும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்திருந்தனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெரும் திரளாக கலந்து கொண்ட அ.தி.மு.க., மகளிர் அணியினர், அம்மி, ஆட்டு உரல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து, அங்கேயே வைத்து அரிசி குத்தல், மசாலா மற்றும் மாவு அரைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
நிர்வாகத் திறமை இல்லாத அரசு, மின் கட்டண சுமையை ஏற்றியதுடன், ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்காமல் அல்லல்படுத்துகிறது.
ஆனால், தமிழகத்தில் தங்குதடையின்றி போதைப்பொருட்கள் மட்டும் கிடைக்கிறது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு, ரேஷன் கடைகளில், பருப்பு, பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

