பயந்தோடிய மக்கள் மீது தாக்குதல் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை
பயந்தோடிய மக்கள் மீது தாக்குதல் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை
ADDED : ஜூலை 30, 2024 12:35 AM
சென்னை : துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து அறிக்கை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
துாத்துக்குடியில் 2008ல், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 13 பேர் பலியாகினர்.
சொத்து விவரம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில், வழக்கு முடிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது பணியில் இருந்த காவல், வருவாய் துறை மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்களை சேகரிக்க, மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.
மீண்டும் விசாரணை
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''காவல், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்கள் சேகரிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, மூன்று மாதம் அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சொத்து விபரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சொத்துக்களை வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே, அந்த விபரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு, அரசு செயலர், டி.ஜி.பி., ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கில், சி.பி.ஐ., விசாரணை என்பது ஏற்கத்தக்கது அல்ல. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும்.
உயிருக்கு பயந்தோடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது. இதுபோல, இதற்கு முன் கேள்விபட்டது இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவே வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
தவறை உணர வேண்டும்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்கிவிட்டு, வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம்? போலீசார் தங்கள் தவறை உணர வேண்டும்.
ஒரு சில ஆண்டுகள் அனுமதியின்றி, சம்பந்தப்பட்ட ஆலை இயங்கியுள்ளது. ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில், அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது; இது கவலையளிக்கிறது.
அந்த தனி நபர்கள் மீது, இப்போதும் நடவடிக்கை எடுக்க முடியாது. அனுமதியின்றி ஆலை இயங்கியது அரசுக்கு தெரிந்தும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அப்போது, எல்லாரும் எங்கு இருந்தனர்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விசாரணையை மூன்று மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

