ADDED : மார் 23, 2024 02:02 AM

கோவை,:பா.ஜ., வேட்பாளர்கள் வசந்தராஜ், முருகானந்தம், அண்ணாமலை நேற்று கோவை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்ணாமலை அளித்த பேட்டி:
கோவை தொகுதியை பொறுத்தவரை மூன்று வேட்பாளர்களுக்கும், மூன்று கட்சியினருக்கும் போட்டி அல்ல. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக நடக்கும் அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் தேர்தல்.
தமிழகத்தில் பணமழை இங்கே பொழியும்; இலவசங்கள் அள்ளி தெளிக்கப்படும். கோவையில் முதல்வர் வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெறும். தமிழகத்தின் அரசியல் மாற்றம், வளர்ச்சி கோவையிலிருந்து துவங்க வேண்டும். மோடி பிரதமராகும் போது, சர்வதேச வரைபடத்தில் கோவையை பதிக்க போகிறோம்.
இப்போதும் சொல்கிறேன். டில்லி அரசியலில் விருப்பம் இல்லை; தமிழக அரசியலில் தொடர்ந்து இருப்பேன். மோடி போட்டியிட உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவை மதிக்கிறேன்.
மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது, 2026ல் ஆட்சிஅமைப்பதற்கு தான்; 400 எம்.பி.,க்களை பெற்று ஆட்சி அமைத்தாலும், 2026 தான் எங்கள் குறி.
தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை, திருத்தங்கள் செய்து வெளியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் எனது சண்டை வேட்பாளர்களுடன் இல்லை. கோபாலபுரத்தோடு, அறிவாலயத்தோடு, தமிழகத்தின் ஆதிக்க சக்தி அவர்களோடு தான் சண்டை. கீழே இருப்பவர்களோடு கிடையாது.
கோவை லோக்சபா தொகுதியில் எல்லா அமைச்சர்களும் இங்கே இருப்பர். பணத்தை கொண்டு வருவர். நுாற்றுக்கணக்கான கோடியை இங்கே செலவு செய்வர். அண்ணாமலை இன்று சொல்கிறேன்; ஓட்டுக்கு ஒரு ரூபாய் அண்ணாமலை தரமாட்டேன். மக்களை நம்பி கோவையில் களமிறங்குகிறேன். செலவு குறைவான தேர்தலாக இருக்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு, வேட்பாளர்களாக வந்துள்ளேன்.
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். ஊடகங்கள் அடுத்த 40 நாட்கள் என்னுடைய பிரசாரத்தை பூதக்கண்ணாடி போட்டு பாருங்கள். தேர்தல் விதிமுறையை மீற மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

