அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ., பங்கேற்காது முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்
ADDED : மார் 02, 2025 06:27 AM
சென்னை: 'வரும், 5ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், பா.ஜ., பங்கேற்காது' என, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் கூறப்பட்டுள்ள விபரம்:
தொகுதி மறுவரையறை செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, தொகுதி மறுவரையறை குறித்து, நீங்கள் தவறாக புரிந்து கொண்டு, கற்பனையான அச்சங்களை பரப்பவும், வேண்டுமென்றே பொய் சொல்லவும் மட்டுமே, அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமீபத்திய தமிழக வருகையின்போது கூட, தொகுதி மறுவரையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்றும், தொகுதி மறுவரையறை என்பது, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, நிர்வாக சீர்கேடு, உச்சம் தொட்ட ஊழல், முடங்கி போன அரசு என, தமிழகம் திண்டாடி கொண்டிருக்கையில், ஒவ்வொரு நாளும், 'வீடியோ ரீல்'களை படமாக்க ஷுட்டிங் நடத்தவும், உங்கள் கற்பனையான பிரச்னைகளை பற்றி பேசவும் மட்டுமே, உங்கள் முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து, மக்கள் நலனில் கவனத்தை செலுத்தவும்.
இன்றைய உங்கள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, 2006 - 11 வரையிலான உங்கள் தந்தையின் இருண்ட ஆட்சியே சிறப்பாக தெரிந்தது என்று, தமிழக மக்கள் சொல்ல துவங்கியுள்ளனர் என்பதை, நீங்கள் உணர வேண்டும்.
இதற்காக நீங்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் மொழி கொள்கையை குறித்தும் குறிப்பிட்டிருந்தீர்கள். நாங்கள் உங்களிடம் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம். ஆனால், நீங்களும், உங்கள் கட்சியும் அந்த கேள்வியை தொடர்ந்து தவிர்த்து வருகிறீர்கள்.
ஒரு தனியார் மாணவருக்கு, மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு வழங்கப்படும்போது, அது ஏன் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை, நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொது மக்களுக்கு தெரிவிக்க தவறி விட்டீர்கள்.
இது, முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், இம்மாதம், 5ம் தேதி கூட்டப்பட இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
மும்மொழி கொள்கை வேண்டும் என்பதை ஆதரித்து, பா.ஜ., தன் கையெழுத்து பிரசாரத்தை, 5ல் துவக்குகிறது என்பதையும், உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.