அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., 'அம்மன்' அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., 'அம்மன்' அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
ADDED : பிப் 26, 2025 12:58 AM

கோவை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கோவை அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., 'அம்மன்' அர்ஜுனன் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன். இவர், 2016 முதல் 2022க்கு உட்பட்ட காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக, 2.75 கோடி சொத்து சேர்த்ததாக, இவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
இதன் அடிப்படையில், நேற்று காலை, 6:00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் எட்டு போலீசார், செல்வபுரம், அசோக் நகரில் உள்ள அம்மன் அர்ஜுனன் வீட்டில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, விளக்கம் கேட்டனர்.
சோதனை குறித்து தகவலறிந்து, அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், ஜெயராம், தாமோதரன், செல்வராஜ், கந்தசாமி, ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு வந்தனர். தொண்டர்கள், 100க்கும் மேற்பட்டோர், வீட்டின் முன் கூடி, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அனைவருக்கும் டீ, காபி, ஜூஸ், ஸ்நாக்ஸ், காலை உணவு, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டர்கள், நிர்வாகிகள் அமர பந்தல் அமைத்து, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
கடந்த, 2016ன் படி அம்மன் அர்ஜுனன் சொத்து மதிப்பு, 2.30 கோடி ரூபாயாக இருந்தது. 2022ம் ஆண்டில் 5.96 கோடியாக உயர்ந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் அவர், 3.87 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அதில், 2.97 கோடி செலவானதாக கணக்கு காட்டியுள்ளார்.
இவ்வகையில் அவரது சொத்தின் மதிப்பு 2022 மார்ச் 31ல், 90 லட்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சொத்து மதிப்பு, 3.66 கோடியாக காட்டப்பட்டுள்ளது. இதனால், 2.75 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஒத்துழைப்பு
அம்மன் அர்ஜுனன் கூறுகையில், ''எனக்கு எந்தவித நோட்டீசும் கொடுக்கவில்லை. நான் காலை நடைபயிற்சி சென்றிருந்தேன். என்னை போனில் அழைத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
''எப்போதோ எதிர்பார்த்தேன்; இப்போதுதான் வந்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்,'' என்றார்.