சமூக பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
சமூக பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
ADDED : ஜூன் 16, 2024 05:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக தாசில்தார் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
விழுப்புரம் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றான உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை உழவர்களுக்கு வழங்கிய விபத்து இழப்பீடு, கல்வி, திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித் தொகை வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கடந்த 2021ம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது உறுதியானதை தொடர்ந்து, அப்போதைய சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் ஆகியோர் மீது லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., தேவநாதன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன், திருவேங்கடம், ஈஸ்வரி ஆகியோர் தலைமையிலான நான்கு குழுவினர் நேற்று காலை 6:00 மணிக்கு விழுப்புரம், தந்தை பெரியார் நகர், யமுனா வீதி, மந்தக்கரை கீழ்செட்டி தெருவில் உள்ள தாசில்தார் சுந்தர்ராஜனுக்கு சொந்தமான 2 வீடுகளிலும், செல்வராஜ் நகரில் உள்ள தேவிகா மற்றும் தாதம்பாளையத்தில் உள்ள முருகன் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
மதியம் 2:00 மணிவரை 8 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் மூவரின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.1.70 லட்சம் பணத்தை கைப்பற்றி கொண்டு சென்றனர்.
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட சுந்தர்ராஜன் தற்போது செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராகவும், தேவிகா விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

