ADDED : ஏப் 06, 2024 01:04 AM
காரைக்குடி:''தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
காரைக்குடியில் சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தி எம்.பி.,யை ஆதரித்து இந்திய கம்யூ., சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது.
பின்னர் முத்தரசன் கூறியதாவது:
காங்., தேர்தல் அறிக்கையில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, 100 நாள் வேலைவாய்ப்பு ஊதியம் ரூ.400, பிளஸ் 2 வரை கட்டாய கல்வி, நீட் நுழைவுத் தேர்வை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் ரத்து செய்து கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் வரவேற்கத்தக்கது.
பா.ஜ.,விற்கு மிகப்பெரிய பின்னடைவு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி எதுவுமே செய்யவில்லை. 2014ல் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் டீசல் விலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தந்த எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் என்று கூறியவர்கள், இன்று தேர்தலை கருத்தில் கொண்டு விலையை குறைக்கின்றனர்.
கேள்விக்குறி
அமலாக்கத்துறை, ஐ.டி., தேர்தல் ஆணையம் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்பட முடியாமல் ஒரு நெருக்கடியை உருவாக்கி மோடியின் உத்தரவை நிறைவேற்றும் அமைப்புகளாக மாறி உள்ளது. இது ஜனநாயகத்திற்கு பேராபத்து. அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழக மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாநில அரசு வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடித்தான் பலன் அடைய வேண்டியுள்ளது. மோடி 7 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். தமிழகத்திற்கு சென்று எந்த பயனும் இல்லை என்று அமித்ஷா பயணத்தை ரத்து செய்துள்ளார். மோடியும் அதே முடிவெடுத்தால் அவருக்கு நல்லது . இவ்வாறு அவர் கூறினார்.

