ADDED : ஜூன் 13, 2024 02:37 AM
மதுரை:கரூர் நவீன்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், மே 17ல் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,'விருந்தினர்கள் உணவு உட்கொண்டபின், வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் பயன்படுத்த முடியும். இதற்கு யாரும் இடையூறு செய்ய்க்கூடாது' என உத்தரவிட்டார்.
அதன்படி மே 18ல் நிகழ்ச்சி நடந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, கரூர் கலெக்டர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒரு பொதுநல வழக்கில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சியை நடத்த 2015 முதல் அனுமதிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று அந்த மனுவை விசாரித்து, கரூர் எஸ்.பி., வாங்கல் இன்ஸ்பெக்டர், நெரூர் சத்குரு சதாசிவ பிரமேந்திராள் சபை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25க்கு ஒத்திவைத்தது.

