ADDED : ஜூலை 23, 2024 07:38 PM
சென்னை:லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின், கட்சியை சீரமைக்கும் வகையில் மாநில, மாவட்ட, மண்டல அளவில் புதிய நிர்வாகிகளை த.மா.கா., தலைவர் வாசன் நியமித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் த.மா.கா., 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து, அக்கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய நிர்வாகத்தைக் கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க, வாசன் முடிவு செய்தார். அதன்படி, இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து யுவராஜா ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசன் நேற்று வெளியிட்டார். அதன் விபரம்:
மாநில தலைவராக வாசன், பொருளாளராக டாக்டர் ராமன், துணைத் தலைவர்களாக பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாட்ஷா உட்பட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலர்களாக ராஜேந்திரன், ராஜகோபால், ஜவஹர் பாபு, ராணி கிருஷ்ணன் உட்பட12 பேரும், அமைப்பு செயலர்களாக லீக் மோகன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உட்பட 12 பேர், செயலர்களாக கே.டி.எஸ்.ராஜா, ராஜமகாலிங்கம் உட்பட, 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொள்கைப் பரப்பு செயலர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், இணைச் செயலர்கள், செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள், அரசியல் ஆலோசனை உயர்மட்டக்குழு என, பல்வேறு குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞரணி, மாணவர் அணி, மகளிர் அணி போன்ற துணை அமைப்புகளை கலைத்து விட்டு, சென்னை, மதுரை, கோவை, டெல்டா என, மண்டலமாக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
---

