ADDED : மே 06, 2024 01:16 AM
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நாளை (மே 7) முதல் இ- பாஸ் பதிவு செய்து வர வேண்டும். இ பாஸ் பெற இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வர எந்த தடையும் இல்லை,'' என, கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நீலகரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் மே 7 முதல் ஜூன் 30 வரை இ- பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கலெக்டர் பூங்கொடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு, இ- பாஸ் முறையை அமல்படுத்த மென்பொருள் TNEGA-வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ--பாஸ் பதிவு செய்து கொடைக்கானல் பயணிக்கலாம். இ- பாஸ் தேவைப்படுபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ- பாஸ் பெறலாம். இ- பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆர்கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டை சார்ந்த சுற்றுலா பயணிகள் அலைபேசி எண் வாயிலாகவும், வெளி நாடுகளிலிருந்து வருவோர் இ- மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களை சமர்ப்பித்து, இ- பாஸ் பதிவு செய்து பெறலாம்.
இந்த மென்பொருளில் சுற்றுலா பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு வரும் அரசு பஸ்கள், அதில் பயணிப்பவர்களின் விவரங்கள் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் இ- பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இ பாஸ் 3 வகையான அடையாள கோடுகளுடன் வழங்கப்படவுள்ளது. உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறம், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிறம், சுற்றுலா, வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிறம் அடையாளக் கோட்டுடன் இ பாஸ் வழங்கப்படும்.
கொடைக்கானல் நகராட்சி (வெள்ளி நீர்வீழ்ச்சி) சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை 'epass.tnega.org” என்ற இணையத்தில் ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ- பாஸ் பெற்றால் போதுமானது.
சுங்க கட்டண விலக்கிலிருந்து விடுபட்ட உள்ளுர் வாகனங்களுக்கு, வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது சுங்கச்சாவடி (வெள்ளிநீர்வீழ்ச்சி) அருகில் அமைக்கப்பட்ட சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளுர் இ-பாஸ் வழங்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இ- பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் இன்று காலை முதல் இ- பாஸ் பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.