போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? உயர் நீதிமன்றம் கேள்வி
போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : செப் 04, 2024 11:41 AM
சென்னை: 'தமிழகத்தில், போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது, போலீசுக்கு தெரியாதா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னையில் குடிசைவாசிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், 'துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட, நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் இல்லை' என்று கூறப்பட்டது.
அட்வகேட் கமிஷனர்
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.
இதையடுத்து, அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இந்தப் பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகக் கூறப்பட்டது.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
'போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் அட்வகேட் கமிஷனர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது; அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை வசதி
தமிழகத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது, போலீசுக்கு தெரியுமா, தெரியாதா?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதனால், பள்ளிகளில் படிப்பவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''போதைப் பொருட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அட்வகேட் கமிஷனர் அறிக்கை அடிப்படையில், அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.
இதையடுத்து, அட்வகேட் கமிஷனரின் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்கும்படியும், நான்கு இடங்களிலும் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பாக, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, வரும் 9க்கு தள்ளி வைத்தனர்.