ஒரே குடும்பத்தில் மூவரை கொலை செய்து எரித்த இரு வாலிபர்கள் கைது
ஒரே குடும்பத்தில் மூவரை கொலை செய்து எரித்த இரு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 20, 2024 03:03 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து எரித்த வழக்கில், இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி, 60. இவரது வீடு, கடந்த 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை பூட்டியிருந்த நிலையில், துர்நாற்றம் வீசியது.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கமலீஸ்வரி, அவரது இளைய மகன் சுமந்த்குமார், 37, அவரது மகன் இஷாந்த், 8, ஆகியோர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, சுமந்த்குமார் வேலை செய்த இடங்கள், அவரது இரண்டாவது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கமலீஸ்வரி வீட்டின் பக்கத்து தெருவை சேர்ந்த பழனி மகன் சங்கர்ஆனந்த், 21, கொலை நடந்த நாள் முதல் தலைமறைவானது தெரிந்தது.
சென்னையில் இருந்த சங்கர்ஆனந்த் மற்றும் நெல்லிக்குப்பத்தில் இருந்த அவரது நண்பர் முகமது அலி மகன் ஷாகுல் ஹமீது, 20, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
சங்கர் ஆனந்த், போலீசாரிடம் கூறியதாவது:
என் தந்தை இரண்டு ஆண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தாய் லட்சுமிக்கும், சுமந்த்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் பேசிக் கொண்டனர். இந்நிலையில் என் தாய், ஆறு மாதங்களுக்கு முன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு, சுமந்த்குமார் தான் காரணம் என நினைத்து, அவர் மீது கொலை வெறியில் இருந்தேன். நான் கமலீஸ்வரி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் என்னை திட்டி வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த நான், சுமந்த்குமார், கமலீஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்து, என் நண்பர் ஷாகுல் ஹமீதிடம் கூறினேன்.
கடந்த 12ம் தேதி இருவரும் ஒன்றாக மது குடித்துவிட்டு, கஞ்சா அடித்தோம். அப்போது, முதலில் என்னை போகச் சொன்ன ஷாகுல் ஹமீது, பின்னால் வருவதாக கூறினார்.
அன்று இரவு கமலீஸ்வரி வீட்டின் வெளியே காருக்கு அருகில், படிக்கட்டு மறைவில் இரண்டு கத்திகளுடன் காத்திருந்தேன். நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் ஆகியும் ஷாகுல் ஹமீது வரவில்லை. அதனால் நான் மட்டும்கொலை செய்ய முடிவு செய்து, வீட்டின் கதவை தட்டினேன்.
கதவை திறந்த சுமந்த்குமார் தலையில் கத்தியால் வெட்டினேன். ரத்த காயத்துடன் உள்ளே சென்ற சுமந்த்குமார், கத்தியை எடுத்து வந்து என்னை வெட்டினார்.
அதில் என் கைவிரல் ஒன்று துண்டானது. இதனால் அந்த வீட்டின் போர்டிகோவில் ரத்தக்கறையானது. பின், சுமந்த்குமாரை சரமாரியாக வெட்டினேன்.
தடுக்க வந்த கமலீஸ்வரியையும் பல இடங்களில் வெட்டி கொலை செய்தேன். சத்தம் கேட்டு வந்த இஷாந்த், கூச்சல் போடவே, அவனை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தேன். இதில் சாகாவிட்டால் என்ன செய்வது என நினைத்து, கத்தியால் வெட்டினேன்.
பின், பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு தோட்டத்து கதவு வழியாக வெளியேறி, கதவை சாத்திவிட்டு தப்பினேன். அங்கிருந்து ஷாகுல் ஹமீது வீட்டுக்கு சென்று ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
மறுநாள் 13ம் தேதி கமலீஸ்வரி வீட்டின் வழியே சென்று பார்த்தபோது, வீடு பூட்டியிருந்ததால், மூவரும் இறந்ததை உறுதி செய்து கொண்டு, ஷாகுல் ஹமீதுவிடம் கூறினேன். அதற்கு அவர், 'கொலை செய்துவிட்டு அப்படியே வந்து விட்டாய். போலீசார் வந்தால் எளிதில் கண்டுபிடித்து விடுவர். எனவே மூவரையும் எரித்துவிட்டால் தடயம் கிடைக்காது' எனக்கூறி, பெட்ரோல் வாங்கி வந்து கொடுத்தார்.
பின், 14ம் தேதி நள்ளிரவு கமலீஸ்வரி வீட்டின் தோட்டத்தின் வழியே உள்ளே சென்று, மூவரின் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு, தோட்டத்து கதவை தாழ்ப்பாள் போட்டேன்.
பின், முன்பக்கம் வந்து, கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டு விட்டு, சுவர் ஏறி குதித்து வீட்டுக்கு சென்றேன். போலீசார் என்னை பிடித்து விடுவர் என்ற பயத்தில் சென்னைக்கு சென்றுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, சங்கர்ஆனந்த், ஷாகுல் ஹமீது ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர்.

