ADDED : ஜூலை 11, 2024 01:49 AM
சென்னை:சென்னையில் தலைமை அலுவலகம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் அமைத்து, ஆருத்ரா கோல்டு நிறுவனம் இயங்கி வந்தது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 36,000 ரூபாய் வட்டி தருவதாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் டிபாசிட் பெற்றது.
பண மோசடியில் ஈடுபடுவதாக, வந்த புகார்களின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், ஒரு லட்சத்துக்கும் மேலான நபர்களிடம் பணம் பெற்று, 2,438 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோ உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் ரூசோ மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன், விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக, ரூசோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

