தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


ADDED : ஜூலை 07, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல் தேய்மானம், கூச்சம் போக்க என்ன செய்ய வேண்டும்

- -கதிரேசன், மதுரை

பற்களின் மேற்பகுதி எனாமல் எனப்படும். இந்த எனாமல் தேய்ந்து பற்களின் உள்பகுதி வெளியே தெரியும் போது பல் கூச்சம் ஏற்படும். மிக அழுத்தமாக பல் தேய்ப்பது, குளிர்பானங்கள் அதிகமாக குடிப்பது, பல் கடிப்பது போன்றவை எனாமல் தேய்ந்து போவதற்கான காரணங்கள்.

நாம் உண்ணும் உணவும் பற்களின் பாதிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பான்மையான குளிர்பானங்களில் அமிலத்தன்மை உள்ளது. சாக்லேட் மற்றும் ஒட்டக்கூடிய மிட்டாய் வகைகளும் அதிகளவு சர்க்கரை கொண்டுள்ளன. இவை பற்களுக்கு நல்லதல்ல. எனாமல் படலத்தை அரிக்கும் தன்மை கொண்டவை. ஒருமுறை எனாமல் அரிக்கப்பட்டால் மறுமுறை உருவாகாது. நாளடைவில் பற்களின் எனாமல் தேய்ந்து பல் கூச்சமும் வலியும் உண்டாகும். அதுமட்டுமின்றி இப்பற்களில் சொத்தை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை துாங்குவற்கு முன்பாக கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் உடனே தண்ணீரால் வாயை கழுவ வேண்டும்.

உணவு சார்ந்து இல்லாமல் சிலருக்கு வயதாகும் போது இயற்கையாகவே எனாமல் தேய்ந்து பல் கூச்சம் வரும். பல் கடிக்கும் பழக்கத்தினால் பற்களின் மேல் பாகம், எனாமல் பகுதி தேய்ந்து பல் கூச்சம் வரும். பல் கடிக்கும் பழக்கத்திற்கு மனஅழுத்தம் தான் முதல் காரணம். ஈறுநோய் உள்ளவர்களுக்கும் ஈறுகள் கீழிறங்கி பற்களின் வேர் வழியாக பல் கூச்சம் உண்டாகும்.

பல் கூச்சத்தை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக சரிசெய்ய வேண்டும். மிக குறைவாக எப்போதாவது கூச்சம் வருகிறதென்றால் பல் தேய்மானம் ஆரம்ப நிலையில் இருக்கும்.

-- டாக்டர் கண்ணபெருமான்பல் மருத்துவ நிபுணர், மதுரை

பிறவியிலே காது கேட்காமல் இருக்கும் குழந்தைகளுக்கு செவித்திறன் கொண்டு வருவது சாத்தியமா.

- பிரியா, திண்டுக்கல்

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது முறையாக உணவுகள் எடுத்து கொள்ளாமலிருப்பதால் காது கேட்கும் திறன் இல்லாத குறைகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு 3 வயதிலிருந்து 6 வயதிற்குள் செவித்திறனை 'காக்ளியர் இம்பிளான்ட்' சிகிச்சை மூலம் கொண்டு வருவது சாத்தியம். பிறந்த குழந்தைக்கு காது கேட்காமல் இருப்பதை கண்டறிந்ததும் பெற்றோர் காது,மூக்கு,தொண்டை பிரிவு டாக்டர்களை அணுக வேண்டும்.

காக்ளியர் சிகிச்சை மூலம் கருவி ஒன்றை பாதிக்கப்பட்டவர்களின் காதில் பொருத்தி செவித்திறனை கொண்டு வரலாம். இந்த சிகிச்சை பெற்ற பிறகு அதிக ஒலியுடன் பாடல் கேட்பது, அதிக சத்தம் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. தொடர்ந்து ஒரு ஆண்டு டாக்டர்கள் மூலம் அமைதியான அறையில் வைத்து பேச்சு பயிற்சிகள் வழங்கப்படும். பாதிப்பு குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

-டாக்டர் செந்தில்குமார் காது,மூக்கு,தொண்டை நிபுணர்,அரசு மருத்துவமனை திண்டுக்கல்

எனக்கு 60 வயது ஆகிறது. சர்க்கரை நோய் இல்லை. ஆனாலும் கால் எரிச்சல் அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு கூறுங்கள்.

-- ப.நீலகண்டன், கூடலுார்.

60 வயதுள்ள ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மட்டும் கால் எரிச்சல் வராது. ரத்த அழுத்தம், நரம்பு முனையில் பிரச்சனை, அதிக எடை, பாதத்தில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் கால் எரிச்சல் வர வாய்ப்புள்ளது. அணியும் செருப்பில் ஏற்படும் ஒவ்வாமையாலும் கால் எரிச்சல் வரலாம். வைட்டமின் பி-12 குறைபாடு உள்ளவர்களுக்கும் கால் எரிச்சல் வரும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இல்லாதபட்சத்தில் மற்ற காரணங்களுக்காக கால் எரிச்சல் வரலாம். ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்வது, குறைந்த அளவு சர்க்கரை, உப்பை உட்கொள்வது, தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவை இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.

- -டாக்டர் முருகன்

வட்டார மருத்துவ அலுவலர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூடலுார்

விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

-- சி.கண்ணன், ராமநாதபுரம்

முறிவு ஏற்பட்ட பகுதியில் அசைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலும்பு முறிவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது 6 முதல் 8 வாரங்களில் உடைந்த எலும்புகள் சேர்ந்து விடும். சேரும் எலும்புகள் மாற்றி சேர்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு இல்லாமல் நாட்டுக்கட்டு கட்டினால் சரியாகும் என்பது தவறு.

உதாரணமாக கைமூட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டால் நாட்டு கட்டில் கை அப்படியே நின்று விடும். இயல்பாக செயல்பட முடியாது. கால் மூட்டு எலும்பிலும் இதே போல் கால் மடக்க முடியாத நிலை ஏற்படும். சில எலும்பு முறிவுக்கு இரண்டே மாவு கட்டில் சரியாகிவிடும். மருத்துவமனைக்கு சென்றால் ஆப்பரேஷன் செய்வார்கள் என்ற தவறான எண்ணம் உள்ளது. உடைந்த எல்லா எலும்புகளுக்கும் அறுவை சிகிச்சை செய்வதில்லை. இந்த புரிதலும், விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்.

- -டாக்டர் வ.து.ந.மதிவாணன் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை

எனக்கு வயது 40. நீண்ட நேரம் நிற்க முடியவில்லை, அதிக துாரம் நடக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும்.

- அ.சரவணவள்ளி, சிவகங்கை

பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு உடம்பில் ஹார்மோன் வேறுபாடு வர ஆரம்பித்து விடுகிறது. மாதவிடாய் நின்று விடுவதாலும் இயற்கையாகவே விட்டமின் சத்து குறைபாடுகளும் உள்ளதால் முழங்காலில் வலி ஏற்படலாம். இவற்றைப் போக்க விட்டமின் டி, கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். காய்கறிகள் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். சிறுவயதில் இருந்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் 40 வயதுக்கு மேல் முறையான உடற்பயிற்சி, சீரான உணவுடன் உடலை முறையாக பராமரிக்க வேண்டும்.

- டாக்டர் ஆர்.மகேந்திரன்

எலும்பு முறிவு மருத்துவர்

மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

எனக்கு அடிக்கடி குதிகால் வலி ஏற்பட்டு நடக்க முடிவதில்லை. இதற்கான சிகிச்சைகள் என்ன

- -பிரேம் சங்கர், அழகாபுரி

குதிகால் பகுதியில் கூடுதலாக முள் எலும்பு வளர்ந்து காலில் உள்ள தசை நார்களில் குத்துதல், உடல் எடை அதிகரிப்பதால் தசை நார்களில் அழுத்தம், பாதத்திற்கு அழுத்தம் கொடுக்கும் காலணிகளை அணிவது போன்றவற்றால் குதிகால் வலி ஏற்படுகிறது. இரவு துாங்கி காலை எழும் போதும், வெகுநேரம் நிற்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் குதிகாலில் வலி ஏற்படுதல் ஆரம்ப அறிகுறி. இந்த வலி எப்போதாவது வருபவர்கள் பாதை அசைவு பயிற்சி, சூடான உப்பு கலந்த தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுத்தல் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும். ஆனால் பாதிப்பு அடிக்கடி வந்தால் டாக்டரை அணுகவும்.

-- டாக்டர் ஜெ. முரளிதரன்

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்

அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை, விருதுநகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us