ADDED : ஜூலை 26, 2024 10:08 PM
திருப்பூர்:திருப்பூர் உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனராக பணியாற்றியவர் சந்திரசேகரன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.
இவர் மீது காங்கேயம் நகராட்சி, அவிநாசி ஒன்றியம் ஆகியவற்றில் கணக்கு வழக்குகள் தணிக்கையில் பல்வேறு குறைபாடுகளை கண்டு கொள்ளாமல், தனிப்பட்ட முறையில் லாபம் பெற்றுள்ளார் என, புகார் எழுந்தது. இதனால், உள்ளாட்சி நிதி தணிக்கை மண்டல இணை இயக்குனர் உத்தரவில், துணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை அடிப்படையிலும், ஆவணங்கள் ஆய்வின் போதும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, விசாரணை அறிக்கை, துறை இயக்குனருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்குனர் அருண் சுந்தர் தயாளன், முறைகேடுகளில் ஈடுபட்ட உதவி இயக்குனர் சந்திரசேகரனை சஸ்பெண்ட் செய்து, உத்தரவு பிறப்பித்தார்.

