ADDED : மார் 30, 2024 01:03 AM
கோவை:மதுரையை சேர்ந்தவர், 30 வயது இளம்பெண். இவர் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பைனான்சியர் வீரமனோகருடன் 37, பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். வீரமனோகர் மது, போதைப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து பிரிந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணின் தந்தை, குடும்பத் தேவைக்காக வீரமனோகரிடம் ரூ.1 லட்சத்தை வாங்கினார். அதில் ரூ.50 ஆயிரத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதன் காரணமாக வீரமனோகருக்கும், அந்த பெண்ணின் தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
வீரமனோகரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண் கோவை கணுவாய் பகுதியில் குடியேறினார்.
வீரமனோகர் ஜாமினில் வெளியே வந்தார். அந்த பெண் கோவையில் வசிப்பதை அறிந்து, இங்கு வந்த வீரமனோகர் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
பெண்ணின் மொபைல் போன் எண்ணுக்கு, மிரட்டல் வீடியோக்களை அனுப்பினார்.
நேற்று முன்தினம் காலை, அந்த பெண் தனது வீட்டின் அருகே உள்ள, மளிகை கடைக்கு சென்றார். அங்கு சென்ற வீரமனோகர், தகாத வார்த்தைகளால் திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொலை செய்ய முயன்றார். அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டனர். வீரமனோகர் தப்பி ஓடினார்.
அந்த பெண் புகாரின்படி, வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, வீரமனோகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
