ADDED : ஜூன் 04, 2024 01:34 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஆயந்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 38; ஆட்டோ டிரைவர். இவரது அண்ணன் சேகர், 50. இவர், அதே கிராமத்தை சேர்ந்த முருகன், 43, என்பவரிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
இந்த பணத்தை சேகர், மே 27ம் தேதி வட்டியோடு சேர்த்து, 35,000 ரூபாயை முருகனிடம் கொடுத்தார். ஆனால், அவர் எழுதி கொடுத்த பத்திரத்தை முருகன் தரவில்லை.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு முருகனிடம், அந்த பத்திரத்தை சேகர் கேட்டார். அப்போது, முருகன் மற்றும் அவரது மகன்கள் சண்முகம், 22, ஆகாஷ், 20, ஆகியோர் சேகரிடம் மேலும் 5,000 ரூபாய் கேட்டு தகராறு செய்தனர்.
இதையறிந்து அங்கு வந்த சேகரின் தம்பிகள் விஜயகுமார், 38, ஞானபால், 44, ஆகியோர் தட்டிக்கேட்டனர். ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன்கள் விஜயகுமாரை திட்டி, தாக்கி கீழே தள்ளினர்.
மயக்கமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தார். இவருக்கு பேபி என்ற மனைவியும், பரமேஸ்வரி, 4, என்ற மகளும் உள்ளனர். பேபி புகாரின் படி, காணை போலீசார் வழக்கு பதிந்து, முருகன், சண்முகம், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.