முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
முதல்வரின் கான்வாய் பாதையில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி
ADDED : ஆக 05, 2024 01:47 AM
சென்னை:முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனம் சென்ற பாதையில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலியானான்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சேகர்; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று இரவு 8:00 மணிக்கு மனைவி ஷாலினி, பேரன் அலோக்நாத் தர்ஷன், 5, உடன், மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே, முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனம், கருணாநிதியின் நினைவிடம் நோக்கி சென்றது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் படை கான்ஸ்டபிள் மகேந்திரன், 24, மற்ற வாகனங்களை ஓரமாக செல்லுமாறு சைகை செய்துஉள்ளார்.
அந்த சமயத்தில் சேகர் ஓட்டி வந்த ஆட்டோ மீது, கார் ஒன்று மோதியது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, கான்ஸ்டபிள் மகேந்திரன் மீது மோதி கவிழ்ந்தது. இதில், சேகர், ஷாலினி, அலோக்நாத் தர்ஷன் மற்றும் கான்ஸ்டபிள் மகேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த தருணத்தில், முதல்வர் கான்வாய் வாகனம் அந்த இடத்திற்கு வந்துள்ளது.
விபத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், காரில் இருந்து இறங்கி, காயமடைந்தவர்களை காப்பாற்ற முயன்றுஉள்ளார்.
போலீசார் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களை மருத்துவனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
இதில், சிறுவன் அலோக்நாத் தர்ஷன் உயிருக்கு போராடியதால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
சேகர், ஷாலினி மற்றும் கான்ஸ்டபிள் மகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.