ADDED : ஏப் 19, 2024 01:12 AM
சென்னை:கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாதிப்பு இல்லை என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழாவில் உள்ள பண்ணைகளில், வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள், எச்5 என்1 என்ற காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இறந்துள்ளன. இந்த பாதிப்பு தமிழகத்துக்கும் பரவும் என, அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எச்5 என்1ல் பாதிக்கப்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளில் இருந்தும், அவற்றின் கழிவுகளில் இருந்தும் மனிதர்களுக்கும் பறவை காய்ச்சல் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
அதன் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.
தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. இருந்தாலும், கால்நடை துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதனால், மக்கள் அச்சமடைய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

