ADDED : ஜூலை 12, 2024 11:15 PM
மதுரை:நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். நிறுவன நிர்வாகிகள் சிலருக்கு மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது.
இதை ரத்து செய்யக்கோரியும், வழக்கின் விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்ற உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கலாகின.
நீதிபதி எம்.தண்டபாணி: விசாரணை சரியான முறையில் செல்கிறது. நிர்வாக ரீதியான தாமதம் ஏற்பட்டுள்ளது. கூர்மையான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. அச்சத்தின் காரணமாக தாக்கல் செய்த மனு அடிப்படையில் வேறு அமைப்பிற்கு விசாரணையை மாற்ற உத்தரவிட முடியாது.
அம்மனு மற்றும் கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட டிபாசிட்தாரர்கள், அவர்கள் முதலீடு செய்த தொகை விபரங்களை போலீசாரிடம் வழங்க வேண்டும். டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவரை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது.
இந்நிபந்தனைகளை மீறினால் அவர்களுக்கு வழங்கிய ஜாமின் தானாகவே ரத்து செய்யப்படும். அவர்களை போலீசார் காவலில் எடுக்க வேண்டும். போலீசார் 15 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நிறுவனத்தின் சொத்துக்களை அடையாளம் கண்டு முடக்க வேண்டும். அதற்கான உத்தரவை அரசு வெளியிட வேண்டும். டான்பிட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபின் சொத்துக்களை ஏலம் விட வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை டிபாசிட்தாரர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

