பன்னுான் கொலை முயற்சி விவகாரம்; அமெரிக்க நாளிதழுக்கு கண்டனம்
பன்னுான் கொலை முயற்சி விவகாரம்; அமெரிக்க நாளிதழுக்கு கண்டனம்
UPDATED : மே 01, 2024 05:43 AM
ADDED : மே 01, 2024 12:58 AM

புதுடில்லி, 'காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை, அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய நடந்த முயற்சியில், நம் நாட்டின் உளவுத்துறையான, 'ரா' அதிகாரிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, 'வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்ற, தேவையற்ற குற்றச்சாட்டு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவின் சர்ரே நகரில், கடந்த ஆண்டு ஜூன் 18ல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுானை கொலை செய்ய முயற்சி நடந்தது.
இந்த சம்பவத்தில், இந்தியாவின் உளவு அமைப்பான, 'ரா' அதிகாரி விக்ரம் யாதவுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
மிகத் தீவிரமான ஒரு பிரச்னையில், இந்தியா மீது தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, 'வாஷிங்டன் போஸ்ட்' சுமத்தி உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் குழுக்கள் குறித்து, அமெரிக்கா அளிக்கும் தகவல்கள் குறித்து, இந்திய அரசின் உயர்மட்ட கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை
அப்படியிருக்கையில், ஊகத்தின் அடிப்படையிலான, உறுதி செய்யப்படாத தகவல்களை வெளியிடுவது எந்த வகையிலும் பயன் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து, வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் கரீன் ழான்பியர் கூறியதாவது:
இது மிக தீவிரமான பிரச்னை. பிரதமர் மோடியை இங்கு சந்தித்தபோதும் சரி, வெளிநாடுகளில் சந்தித்த போதும் சரி, இது குறித்த எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த விவகாரத்தை மிக தீவிரமான பிரச்னையாக கருதி, விசாரணை நடத்துவதாக இந்தியாவும் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இந்திய அரசு பொறுப்பு கூறவேண்டும் என, எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து எழுப்ப உள்ளோம்.
அதை நிறுத்தப் போவதில்லை. இந்திய அரசிடம் எங்கள் கவலைகளை நேரடியாக தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.