கட்டட விதிகளை திருத்தியும் திட்ட அனுமதி பணி முடக்கம்
கட்டட விதிகளை திருத்தியும் திட்ட அனுமதி பணி முடக்கம்
ADDED : ஏப் 02, 2024 10:14 PM
சென்னை:தமிழகத்தில், 2019ல் பொது கட்டட விதிகள் அமலுக்கு வந்தன. இதில், அதிக உயரமில்லாத அடுக்குமாடி கட்டடங்களின் குறைந்தபட்ச உயர வரம்பு, 39 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. நடைமுறையில் இந்த உயர வரம்பை கடைபிடிப்பதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதற்கு தீர்வு காணும் வகையில், பொது கட்டட விதிகளில் சில திருத்தங்களை அரசு அறிவித்தது. அதன்படி, கட்டடங்களின் குறைந்தபட்ச உயர வரம்பு, 45 அடியாக உயர்த்தப்பட்டது.
இதேபோன்று, பணி நிறைவு சான்று பெறுவதற்கான தகுதி வரம்பு, எட்டு வீடுகள் என உயர்த்தப்பட்டது. இந்த இரண்டு திருத்தங்களுக்கும், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை கடந்த மாதம் அரசாணையை வெளியிட்டது. அரசாணை வந்தாலும், இதற்கான மாற்றங்கள் அமலுக்கு வரவில்லை.
இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
பொது கட்டட விதிகளில், இதுபோன்ற திருத்தங்கள் செய்தால், அதை வழக்கமான முறையில் அமல்படுத்த முடியாது.
ஒற்றைச்சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான சாப்ட்வேரில், தொழில்நுட்ப ரீதியாக திருத்தங்கள் செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் காரணமாக, சாப்ட்வேரில் திருத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதிய கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் தாக்கல், பரிசீலனை பணிகள் முடங்கியுள்ளன. சாப்ட்வேர் மாற்றத்துக்கு பின் தான் இயல்பு நிலை ஏற்படும் என்று தெரிகிறது.
இவ்வாறு கூறினார்.

