ADDED : ஜூன் 15, 2024 09:06 PM
சென்னை:'விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க., சார்பில், மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 'விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ல் நடக்கஉள்ள இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க., போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பா.ம.க., வேட்பாளராக மாநில துணைத் தலைவர் சி.அன்பு மணி போட்டியிடுவார்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., 23.19 சதவீதம் அதாவது 41,428 ஓட்டுகளை பெற்றது. அப்போது வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புமணியே இப்போதும் களமிறக்கப்பட்டு உள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டியில், பா.ம.க., 32,198 ஓட்டுகளை பெற்றது. 2010ல் நடந்த பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், பா.ம.க., 41,285 ஓட்டுகளை பெற்று, அ.தி.மு.க.,வை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்தது.
அதேபோல இப்போதும் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் பா.ம.க., களமிறங்கியுள்ளதாகவும், இதற்காக பா.ம.க.,வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் தீவிர பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

