ADDED : ஜூன் 25, 2024 10:37 PM

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர்.
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளியாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் தனுஷ்கோடி, பாம்பன் மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.
இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்து அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் மன்னார் வளைகுடா கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் விசைப்படகு, நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தினர்.
மேலும் இன்று (ஜூன் 26) பாக்ஜலசந்தி கடலில் ஏற்படும் வானிலை மாற்றத்தை பொறுத்து ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை விதிக்கப்படும் என மீன்துறையினர் தெரிவித்தனர்.

