ADDED : பிப் 22, 2025 11:39 PM
சென்னை:தமிழகத்தில், 15 புதிய வழித்தடங்களில் விரைவு பஸ்கள் சேவையை துவங்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
தினமும், 1,080க்கும் மேற்பட்ட, அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், பயணியர் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால், புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, விரைவு பஸ்களை இயக்கி வருகிறோம்.
அதன்படி, கேரளா வைக்கம் - வேளாங்கண்ணிக்கும், கோவை - மன்னார்குடிக்கும் புதிய வழித்தடங்களில் துவக்கப்பட்ட விரைவு பஸ்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருச்சி - திருச்செந்துார் வழித்தடங்களில் பயணியர் தேவை அதிகமாக இருப்பதால், ஏற்கனவே இயக்கப்பட்ட மூன்று பஸ்களின் எண்ணிக்கையை, தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளோம்.
இதுதவிர, 15 புதிய வழித்தடங்களை தேர்வு செய்து, பட்டியல் தயாரித்து வைத்துள்ளோம். இதில், மன்னார்குடி - பெங்களூரூ சேவையை விரைவில் துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.