ADDED : ஜூலை 10, 2024 06:13 AM

சென்னை : ''நான் ரவுடி என்பதை அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா,'' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும், 'பிளாக்மெயில்' செய்து, அருவருப்பான அரசியல் செய்து வருகிறார். என்னை ரவுடி என அண்ணாமலை கூறியுள்ளார்.
நான் ரவுடி என, அவரால் நிரூபிக்க முடியுமா?
அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்ற சந்தேகம் வருகிறது. உண்மைக்கு புறம்பாக பேசினால், என்ன வழக்கு வரும் என்பது அண்ணாமலைக்கு தெரியுமா?
சட்டப் பாதுகாப்பு தெரியாமல், தலித் மீது அவதுாறு பேசினால், என்ன நடக்கும் என்பது தெரியுமா?
எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில் புகார் கொடுத்தால் என்ன நடக்கும் என தெரியுமா?
ஆனால், எங்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னை ரவுடி என, அவதுாறு பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரப்படும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தால், அண்ணாமலைக்கு முன்ஜாமின் கிடைக்காது. இந்த விவகாரத்தை நாடு முழுதும் கொண்டு செல்வோம்.
தமிழக பா.ஜ.,வின் ரவுடிகள் பட்டியலை, உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், 124 குற்றவாளிகள் பா.ஜ,,வில் உள்ளதாகவும், அவர்கள் மீது, 834 வழக்குகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்துள்ள நபர் ஒருவர் பா.ஜ.,வில் பொறுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகிருக்கிறது. அது குறித்த உண்மை தகவலை அண்ணாமலை வெளியிடுவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.