முதல்வர், அமைச்சர் மீதான வழக்கு வாபஸ் 15 ஆண்டு கடந்த பின் ஆட்சேபிக்க முடியுமா?
முதல்வர், அமைச்சர் மீதான வழக்கு வாபஸ் 15 ஆண்டு கடந்த பின் ஆட்சேபிக்க முடியுமா?
ADDED : ஏப் 27, 2024 12:43 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் முதல்வர்கருணாநிதி, தற்போதைய முதல்வரும், முன்னாள் மேயருமான ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக, 2001ல் சி.பி.சி.ஐ.டி., வழக்குப் பதிவு செய்தது.
ஊழல் நடவடிக்கையால், 115.50 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றதாக புகாரில் கூறப்பட்டது. இந்த வழக்கில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.
வாபஸ்
அத்துடன், இந்த வழக்கில் கருணாநிதி, ஸ்டாலின், பொன்முடி, கோ.சி.மணி உள்ளிட்டோருக்கு எதிராக,குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு எதிரான வழக்குக்கு, 2005ல் சபாநாயகர் ஒப்புதல் வழங்கினார். 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக, வழக்கு தொடர வழங்கிய ஒப்புதலை சபாநாயகர் வாபஸ் பெற்றார்.
சட்டப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டால், பின், அதை ரத்து செய்யவோ, வாபஸ் பெறவோ, அவருக்கு அதிகாரம் இல்லை.
எனவே, ஸ்டாலின், பொன்முடிக்கு எதிரான வழக்குக்கு ஒப்புதல் அளித்ததை வாபஸ் பெற்ற, சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இருவருக்கும் எதிராக, சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடர, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
தள்ளி வைப்பு
சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதாவது, 15 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து, தற்போது வழக்கு தொடர முடியுமா என்று முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 7க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

