சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து
சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து
ADDED : ஆக 22, 2024 11:14 PM
சென்னை:பணம் கொடுத்து வாங்கப்பட்ட சிறுநீரகத்தை, தொழிலதிபருக்கு பொருத்திய மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மருத்துவ, ஊரக நலப் பணிகள் இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 42. இவரிடமிருந்து இடைத்தரகர் வாயிலாக, வணிக ரீதியாக சிறுநீரகம் பெறப்பட்டு, சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு, 2023 அக்., 29ல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பொருத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அளித்த தகவலில், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குனரகம் விசாரணை நடத்தியது.
அதில், புளியந்தோப்பு பகுதியில் செயல்படும் முத்து மருத்துவமனை என்ற, 'பிரைட்' பல்நோக்கு மருத்துவமனையில் தான், சட்டவிரோதமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அம்மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி கூறியதாவது:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பலர் காத்திருக்கின்றனர். தரகர்கள் வாயிலாக லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சிறுநீரகம் வாங்குவது முறையற்ற செயல்.
அதுபோன்று வாங்கப்பட்ட சிறுநீரகத்தை, போலியான உறுப்பு மாற்று ஆணைய சான்றை பயன்படுத்தி, இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதனால், மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மருத்துவமனை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

